Saturday, December 17, 2016

சிறகெட்டும் தொலைவில் வானம்


அந்தப் பெண்ணை பாட்டி என்பதா? அம்மா என்பதா எனக்கு அப்போது போல் இப்போதும் புரியவே இல்லை. வயதானாலும் நெடிதுயர்ந்த நீண்ட உருவம். முழங்கைகளுக்கு கீழான கைகள் தவிர அவரின் முகத்தை கூட அதிகம் பார்த்ததில்லை. ஆளரவம் குறைந்த மங்கல் பொழுதுகளில் எப்போதாவது வீதிகளில் அவரைக் கண்டிருக்கிறேன்.
கிட்டத்தட்ட மங்கிய காவி நிறத்தில் பருத்தி நூற் புடவை, பின்னாளில் தான் புரிந்தது. அது மங்கிய காவி அல்ல பழுப்பேறிய வெள்ளை என்று. அவர் மஞ்சள் நிறத்தின் மங்களத்துக்கு மறுதலிக்கப் பட்டவர். புடவைத் தலைப்பால் தலைமூடப்பட்டிருக்கும் மொட்டாக்கு மீறி அந்த முகத்தை எப்போதும் முழுமையாகப் பார்த்ததில்லை. எப்போதும் குனிந்து கூன் விழுந்தது போல் ஓரு நடை. அந்த திடகாத்திர உருவ அமைப்புக்கு அந்தக்கூன் இயல்பாக பொருந்திப் போகாமல், அவர் தன்னை குறுக்கி நடப்பது போலவே தோன்றும் எனக்கு. சற்றே வெளித்தெரியும் கரங்கள் வாடிவதங்கிய கனகாம்பரம் நிறத்தில் இருக்கும். எப்போதும் வாயில் எதோ ஒரு முணுமுணுப்பு. அது அப்போது ஸ்லோகம் என்று நினைத்தேன். இப்போது சோகமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
மங்கல் விழுந்த மாலைகளில், வீடுகளற்ற வளவுகளின் வேலிகளில் படர்ந்திருக்கும் பிரண்டைத் தண்டு, அல்லது மொசுமொசுக்கை, வாதநிவாரணி ஏதாவது ஒரு இலை பறித்துப் பையில் அடைந்து கொண்டிருப்பார். அவர் மொட்டாக்கு போடும் விதத்தில் அந்தக் கையும் பையும் கூட அதற்குள் மறைந்திருக்கும்.
அவர் யாரோடும் பேசி நான் பார்த்ததில்லை. தன்னோடு மட்டுமே பேசுவார். யாரும் அவரை நெருங்கிச்சென்று பேசியும் நான் கண்டதில்லை. ஒருவேளை அவர் பேசவே மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாமல் நான் அருகே சென்று" பாட்டி நான் உதவலாமா" என்று கேட்டேன் ஒருநாள். அவசரம் ஏதுமில்லாமல் திரும்பி மொட்டாக்கு மறைத்த முகத்தால் அவர் என்னை நோக்கிய போது, அந்தக் கண நேரப் பார்வையில் அது வயதான முகம் அல்ல என்று கண்டேன். கனிவாக நோக்கி விட்டு பதில் ஏதும் சொல்லாமல் கருமமே கண்ணாயினார்.
அந்த நேரங்கள் தவிர அவரை எங்குமே நான் கண்டதில்லை. மாலை விளையாடிக்களைத்த பொழுதுகளில் அநேகமாய் அவரையே பின் தொடரும் என் பார்வை. பொதுவாகவே வீடுகளில் அயலட்டத்தைப் பற்றிப் பேசிக்கொள்ளும் போதும், அவர் பற்றி எந்தப் பேச்சும் வீட்டில் வந்து நான் கண்டதில்லை. நானாகவே ஒருமுறை வீட்டில் விசாரித்தபோது," அது குருக்களின் தாய்" என்ற அசுவாரசியமான பதிலுடன் வீடு தன் பாட்டுக்கு இயங்கியது.
அப்போ அவரை எப்படி எனக்குத் தெரியாமல் போகும். அங்கே அந்த வீட்டில் என் தோழிகள் இருக்கிறார்களே. அங்கு அதிகம் யாரும் போவதில்லை. நானும் எப்போதாவது தான் போவேன். அப்போதும் அவரை நான் கண்டதில்லை. ஒருமுறை அந்த வீட்டுக்கார என் நண்பிகளிடம் அவர் பற்றி விசாரித்த போது
" அது எங்கள் பாட்டி" என்றார்கள்.
" எதுக்கு அவ கோவிலுக்குக் கூட வருவதில்லை. மாலையில மட்டும் வெளியே வருகிறா " என்றேன்.
"அது கைம்பெண். முழுவியளத்துக்கு ஆகாது."
மிக இயல்பான வார்த்தையுடன் அவர்கள் தங்கள் சுவாரசியமான பேச்சை தொடர்ந்தார்கள். எனக்கு மட்டும் எதுகும் காதில் விழாமல் போனது.
அந்த வீட்டின் கடைக்குட்டியான ராஜி என்றழைக்கப்பட்ட ராஜேஸ்வரி மட்டும் அனேகமாக பாட்டி நிற்கும் இடங்களைத் தேடி வரும் . பாட்டி பேசாதபோதும் அதுவா வாய் ஓயாமல் அவவுடன் பேசிக்கொண்டே நடக்கும் . என்னோடு அந்த என்னிநிலு சின்னவளான சின்னப் பெண்ணுக்கு சற்று அதிக நெருக்கம் இருந்ததால் யாருமில்லா பொழுதுகளில் குடும்ப ரகசியம் சொல்லும். பாட்டியின் நரக வாழ்வு பற்றி உடைந்த குரலில் அது பேசும் போது அதுக்கு வயது பத்து. அப்போதே அதன் முற்போக்கு எண்ணங்களும் அதை செயற்படுத்த முடியாத சூழ்நிலையும் வித்தியாசமாக சந்தோசமாக இருக்கும்.
பின் எங்கள் வீட்டில் எப்போதும் அதையே அந்தப் பாட்டி பற்றிய விபரங்களையே விடுத்து விடுத்து விசாரிக்க ஆரம்பித்தேன்.
"உன் வயதுக்கு இதெல்லாம் வேண்டாத விசயங்கள். போய் புத்தகத்தை எடுத்துப் படிச்சு உருப்படுற வழியைப்பார்." எப்பவும் போல பாட்டியின் அறிவுரை அது.
அடுத்து
"உன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் படி முதலில. அது தான் புத்தகப்படிபை வழிநடத்தும்" என்ற பீடிகையுடன் தாத்தா பக்கத்தில் இருத்தி அனைத்துக் கொண்டு கதைக்கத் தொடங்க பாட்டியும் சேர்ந்து கொண்டு சொன்ன விபரங்களில்.....
தலை மழிக்கப்பட்டு மொட்டாக்குக்குள் அந்தப் பெண்ணுடல் உணர்வுகள் விழுங்கிய, விருப்புக்கள் மறுக்கப்பட்ட தன் யாகத்தை ஆரம்பிக்கும் போது அவவின் வயது இருபத்தியிரண்டே மட்டும் தான்.
அதன் பின் முழுவியளத்துக்கு ஆகாத மூதேவியாகி, அந்த வீட்டின் வேலைக்காரியாகி, வெளிவாசல் தவிர்த்து கோடிப்பக்க வழிமட்டும் அவவின் உபயோகத்துக்காக்கி , கொல்லைப்புற மூலையில் தனிமையில் ஒதுக்கமாகி, வெறுந்தரைப் படுக்கையாகி , உப்புக் காரம் வெங்காயம் பூடு தவிர்த்த உணவுகளின் சுவையும் நிராகரிக்கப்பட்ட வராகி,....
தனது இருபத்தியிரண்டு வயதுக்குள் தாயாக்கிய மூன்று பிள்ளைகளை வீட்டில் உள்ளவர்களின் வசவுகளோடு வளர்த்து, அவர்களின் எந்த நன்மைக்கும் முன்னே வரும் அனுமதி மறுக்கப்பட்டவராகி கொல்லைவாசல் வழியே ஒட்டி நின்று பார்க்கும் வாழ்க்கையாகி........
உணவில் சுவை தவிர்த்து, மனதில் மகிழ்வு தவிர்த்து, மனிதர்கள் தவிர்த்து , நடைமுறை வாழ்வின் கருத்துப் பகிரல்கள், சிறிய சிரிப்புக்கள் கூட மறுக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த யாகத்தில் ஓரு கன்னி மன உணர்வுகள் முற்றிலுமாய் வெந்து, அந்தத் தங்கத் தேகம் தினம் தினம் தீயில் வாடிய கொடுமை நடந்து கொண்டிருந்தத காலத்தில், ..
அவரது வயோதிப அப்பாவின் மனைவி காலமான போது மட்டும் அப்பா முழுவியளத்துக்கு உதவாமல் போகவில்லை. ஆண் மகன் வருமானம் நின்றால் குடும்பம் சந்தியில் நிற்கவேண்டும். சம்சாரம் இல்லாத குருக்கள் சவுண்டியாகத்தான் போகவேண்டும். சவுண்டியாகப் போவதானால் தினத்துக்கும் ஐந்து காலப் பூஜை போல் ஐந்து சாவு விழவேண்டும். விஷேச நாட்களின் திருவிழாக்கள் போல் விஷேசச் சாவுகள் இல்லை, அதனால் மேலதிக வருமானம் இல்லை. வருமானத்துக்காக மட்டுமே மீண்டும் திருமணம் என்ற போர்வையில் வயதான அப்பா பிள்ளைகளிலும் இளமையாக ஒரு மனைவி தேடிக்கொண்டார்.
மகள் வாழவேண்டிய வயதில் மூலையில் முடங்கி ஜடம் போல் சுருண்டு உணர்வுகளை உள்ளத்துக்குள் எரித்து வென்று துடித்துக் கிடக்க, அவர் புது மனைவியுடன் பன்னீர் வாசத்தில், முகம் கொள்ளாப் பூரிப்பில் வலம் வந்து கொண்டிருந்தார்.
அதன் பின்னான காலங்களில் போரும் இடப்பெயர்வும் , புலப்பெயர்வுமாக நீண்ட வருடங்களை விழுங்கியிருந்தது. அந்த இடைவெளியில் பல மனிதர்களை என் மனம் மறக்கவில்லையாயினும், மனதில் தூரமாகி நினைவுகளில் நி ல்லாது போயினர். அப்படித்தான் அந்தப் பாட்டியும் எப்போதாவது ஒரு கணம் நினைவில் வருவதோடு சரி. புதிய சூழல், புதிய மனிதர்கள், புதிய பிரச்சனைகள் என் மனதுக்கு மனதுக்கு நெருக்கமாகிப் போயின.
நீண்ட இடைவெளியின் பின் பிறந்த மண்ணுக்கான பயணம். அதில் மனதுக்கு நெருக்கமானவர்களும், நினைவுகளில் அழிக்கமுடியாத சம்பவங்களால் பதிவாகியிருந்த இடங்களும் தவிர எதுகுமே நினைவில் இல்லாத பொழுதொன்றில் எனது சிறியதாய் வீட்டு ஹூட் இல் குடும்பமாகக் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம்
வீட்டின் கேட் திறக்கப்பட்டது. யாரோ என் சித்திக்கு வேண்டியவர்கள் என்ற நினைவில் திரும்பிப் பார்த்து விட்டு நான் என் பேச்சைத் தொடர்ந்தேன். கேற்றுக்கு உள்ளே மதிலோடு ஒன்றி குறுகி நின்ற பெண்ணைப் பார்த்து
"உள்ளே வந்து இருமன் அம்மா "என்ற சித்தியின் குரலுக்கு,
" இல்லை அம்மா ரோட்டால கல்யாண ஊர்வலம் வருகுது என்ர முகத்தில முழிக்கக் கூடாது அது தான்.... அவர்கள் விலக நான் போய் விடுவேன்" என்ற பெண் அவசரமாக புடவைத்தலைப்பை இழுத்து குனிந்த தலையை மூடிக்கொண்டது.
வார்த்தைகளில் அந்தப்பெண்ணின் நிலை எனக்குப் புரிந்தது. சின்ன வயதில் இருந்து வெறுத்த ஒரு விடயத்தை புலப்பெயர்வில் கொஞ்சம் அதன் தாக்க நினைவுகளில் இருந்து விலகியிருந்து , ஊருக்குப் போய் சேர்ந்தவுடன்திரும்ப அதை வாங்கி மனதில் போட்டு கொந்தளிக்க விருப்பமற்று அதை பெரிது படுத்தாமல் இருக்க முயற்சித்தேன். கல்யாண ஊர்வலம் கடந்தது
" வரேம்மா" என்ற விடைபெற லு டன் அந்தப் பெண் வெளியேறும் போது
"இந்தப் பிள்ளையை உனக்கு மறந்து விட்டதா? எங்கட கோவில் ராஜேஸ்வரி, உன் குட்டி ராஜி" என்று சித்தி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது மனது.
பட்டுப் பாவாடையும் , நீண்டகூந்தலின் ஒற்றைச் சடையின் நுனியில் அசையும் அசையும் குஞ்சமும், தலை கொள்ளாக் கதம்பச் சரமும் , அதைச் சட்டமிட்டு அடக்கிய மல்லிகைச்சரமும் கைநிறைந்த கண்ணாடிவளையல்களுமாக , மஞ்சள் குளித்தமுகத்தில் கண்ணுக்குக் கருகருவென்று மையிட்டு, புருவ மத்தியில் சாந்து மின்ன அலங்கார பூஜிதையாக, பால அம்பிகைபோல் அந்தப் பெண்ணின் தோற்றம் மனதில் வந்து போனது ,
மனம் கட்டுமீறி ஹோ என்று அதிர்ந்து கதறிப் பரபரக்க எழுந்து ஓடினேன். புடவைத்தலைப்பால் தலையில் முக்காட்டிட்டு குனிந்த படி, குறுகி நடந்து கொண்டிருந்த அந்தப்பெண்
"ராஜிம்மா" என்ற அழைப்புப் போன்ற என் கூவலில் சட்டென நின்றது. கிட்டே நெருங்குகையில் அடையாளம் கண்டுகொண்டு
"அக்கா "என்ற அந்தக் குரலில் அதிர்வும் ஆர்வமும் பாசமும் கூடவே இனங்கான முடியா ஒரு இறப்பும் இருந்தது முகமும் கூட உயிரைத் தொலைத்திருந்தது .
சுகம் விசாரித்த விதத்தில் அன்பு மாறாமல் இருந்தது அவள் குரல் பின்
எந்த ஆர்வமும் அற்ற இறந்து போன இயந்திரக் குரலில்
" நான் வெளியே வருவதில்லை அக்கா. என் மகன் ஆஸ்பத்திரியில் அதால தான் வெளிக்கிட்டனான்."
" உள்ளே வரீங்களா ராஜி" என்றேன். சற்றுத் தயங்கி சுற்றும் முற்றும் பார்த்து
" இப்ப விட்டால் இனி எப்ப உங்களைப் பார்ப்பேனோ தெரியாது" என்ற முணுமுணுப்புடன், யாராவது கண்டால்...... என்ற தயக்கத்துடன் உள்ளே வந்தது நான் நேசித்த பால அம்பிகை. அமங்கலத் தோற்றத்தில்.


முன்பு அவர்களது பாட்டி இருந்த கோலம் தான். சிறு மாற்றம், பாட்டியின் புடவை போல் மஞ்சலாகிய வெள்ளைப்புடவை இல்லாமல் தூய வெள்ளையில் சிறு கறுப்புப் புள்ளிகளுடன் புடவை. நெற்றியில் விபூதிக் கீற்றல், கண்களில் வெறுமையுடன் நின்ற அந்தக் குழந்தை இரு தசாப்தங்களின் பின்னும் மாறாத பெண் அடக்குமுறைச் சமுதாயத்தின் சாபத்தின் அடையாளமாய் தோன்றியது. என்னால் எந்தக் கேள்வியும் கேட்க முடியாமல் இருக்க, "மூன்று குழந்தைகள் அக்கா, மூன்றாவது பிறக்க அவர் போயிட்டார். "
" அண்ணா வீட்டில இருக்கிறேன். சடங்குகளுக்கும், பூஜைக்கும் தேவையான வேலைகள் செய்வதில்லை அது தவிர மிச்சம் எல்லாம் நான் செய்வேன். என்னையும் பிள்ளைகளையும் வைச்சு சாப்பாடு போடும் போது அசையாமல் இருக்க முடியுமா ? " என்ற ராஜியிடம்
" நல்லா தானேம்மா படிச்சுக் கொண்டிருந்தீங்க. இது உங்கட பாட்டி காலமில்லை. ஒரு வேலை தேடிக்கொள்ளக் கூடாதா" என்றேன்.
" வெளியே வெளிக்கிட்டா முழுவியளத்துக்குக் கூடாது. அறுத்துக் கொட்டினவள் வெளியே வாசலுக்குப் போனால் , நாலு பேரைப் பார்க்கையில , பேசுகையில மனம் அலைபாய்ந்து உடம்பு தினவெடுக்கும். குடும்பம் சந்தி சிரிச்சுப்போகும். வீட்டு மூலைக்குள்ள அடங்கிக் கிடக்க வேண்டும் "என்று அவள் சொன்ன வார்த்தை அவளது அல்ல. அந்த சமுதாயத்தின் வார்த்தை. அல்லது அவள் சார்ந்த குடும்பத்தின் குரல்.
உணர்வு தொலைத்த அந்தச் சிற்பம் அடுத்ததாய் சொன்ன வார்த்தை அதனுடையது.
" அவர் செத்துப் போனதுக்கு எனக்கு எதுக்கக்கா தண்டனை. கடவுளுக்கல்லவா கொடுக்க வேண்டும்." என்ற போது அந்தக் குரல் நிறையவே உடைந்திருந்தது.
"எனக்கு என் சொந்தக்காலில் நிக்க முடியும், யாரும் விடமாட்டீனம். நான் ....... நான்...... பாட்டியின் கொல்லை அறையில் ...... பாட்டிமாதிரியே,..,..... உயிரோடு இருக்கப் பிடிக்கலைக்கா".
உடைந்து குமுறி வந்த வார்த்தைகளுடன் தன்னைக் கட்டுப்படுத்தி, சுற்றி வரப் பார்த்து, அவசரமாய் கண் துடைத்து ,
" நீங்கள் என்றபடியால் தான் மனம் விட்டுக் கதைச்சனான் அக்கா. செத்துப் போய் நடைப்பிணமாகத் திரிகின்ற ராஜிக்கு கெதியா சடங்கு முடித்து காடாத்த வேணும் என்று வேண்டிக்கொள்ளுங்க"
உடைந்த குரலில் கூறிவிட்டு இயந்திரமாய் வெளியேறியது என் பால அம்பிகை.
உடைந்து நொறுங்கி, வெம்பி பேதலித்து , செயலற்ற கோபத்தில் துடித்த மனம் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீராய் வடிந்தது.
இத்தனை வருட இடைவெளியில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சமுதாயம் கொண்டுவரவில்லை. கொண்டுவரவும் மாட்டாது. மாற்றங்கள் தேவை எனில் பாதிக்கப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். சடங்குகள் தேவையில்லை," சிறை உடைத்து வெளியே வா என் சிறு கிளியே. நீ பார்க்காத தூரத்தில், உன் சிறகெட்டும் தொலைவில் விரிந்திருக்கிறது உன் வானம்." என்ற வார்த்தைகள் மட்டுமே என் உதடுகளால் உச்சரிக்க முடிந்தன..

No comments:

Post a Comment